மட்டக்களப்பு நகரப் போக்குவரத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் ‘புதுப்பாலம்’ திடீரென இடிந்து வீழ்ந்ததால், அப்பகுதிக்கான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 வருடங்கள் பழமையான இந்தப் பாலத்தில் ஏற்கனவே வெடிப்புகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 28-ஆம் திகதி மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் போக்குவரத்து சிரமங்களைக் கருத்திற்கொண்டு, குறித்த இடத்தில் தற்காலிகமாக ‘பெய்லி’ (Bailey) ரக பாலமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையூடாக முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகள் வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. நிரந்தரப் பாலம் அமைக்கப்படும் வரை, இந்தத் தற்காலிகப் பாலமே போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்குச் செல்லும் பிரதான வீதி இது என்பதால், கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
















