எட்டு வார கால போர்நிறுத்தம் முடிவுக்கு வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப் அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், புதன்கிழமை (08) இரவு ஈரான் மீது அமெரிக்க இராணுவப் படைகள் புதிய தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் “கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்திற்கு” அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய ஈரானின் திறனை வலுவிழக்கச் செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று சென்ட்காம் (CENTCOM) சுட்டிக்காட்டியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் அமைந்துள்ள துறைமுக நகரமான பண்டார் அப்பாஸ், மற்றொரு தெற்கு கடற்கரை நகரமான சிரிக் மற்றும் ஈரானின் அணுமின் நிலைய வளாகம் அமைந்துள்ள தென்மேற்கு மாகாணமான புஷெர் ஆகிய இடங்களில் வெடிவிபத்துகள் நிகழ்ந்ததாக புதன்கிழமை இரவு ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அண்மைய தாக்குதல்களுக்குப் பின்னர், ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் வெளியிட்ட பதிவில் ட்ரம்ப், நேற்று ஈரான் கப்பல்கள் மீது நடத்திய குண்டுவீச்சுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்தால், நிலைமை இன்னும் மோசமாகும் – என்று எச்சரித்துள்ளார்.
ஈரான் இது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை; இருப்பினும், அமெரிக்காவிடமிருந்து எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதற்கு உடனடிப் பதிலடி கொடுக்கப்படும் என்று அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் முன்னரே எச்சரித்துள்ளனர்.
அமெரிக்கத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்த விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை; இருப்பினும், சபஹார் (Chabahar) பகுதியில் மின்சாரத் தடையும், புஷெஹரில் (Bushehr) உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் முகாம் ஒன்றில் தீ விபத்தும் ஏற்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சபஹாரில் (Chabahar) துண்டிக்கப்பட்ட மூன்று மின் இணைப்புகளில் இரண்டு விரைவாகச் சீரமைக்கப்பட்டுவிட்டதாகவும், மூன்றாவது இணைப்பு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் ஈரானிய மாணவர் செய்தி முகவர் நிலையம் (ISNA) தெரிவித்துள்ளது.
ஜூன் 17 அன்று இரு தரப்பினரிடையேயும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளுக்கு இடையில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மிக மோசமான தாக்குதல்கள் பரிமாறப்பட்டன.
ஹார்முஸ் நீரிணையில் உள்ள மூன்று டேங்கர் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்க படைகள் ஈரானில் 80-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கின.
புதன்கிழமை அன்று,இதற்குப் பதிலடியாக பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல்களை தொடர்ந்து,கடந்த மாதம் ஈரானுடன் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம் “முடிந்துவிட்டது” என்று புதன்கிழமை அன்று ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள் இடம்பெற்றிருந்தன; அவற்றுள், பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டிய 60 நாள் போர்நிறுத்தக் காலம், ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கான வழி, மற்றும் ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகளை நீக்குதல் ஆகியவை அடங்கும்.
பேச்சுவார்த்தைகளுக்கான 60 நாள் காலக்கெடு இன்னும் முடிவடையவில்லை, ஆனால் மேலதிகப் பேச்சுவார்த்தைகளை “நேர விரயம்” என்று கருதுவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நடந்த முதல் தாக்குதல்கள் இது மாத்திரம் அல்ல.
ஹார்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது ஈரானிய ஏவுகணை அல்லது எறிபொருள் ஒன்று தாக்கியதைத் தொடர்ந்து, ஜூன் 26 அன்று ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது.
எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் கப்பல் ஒன்றின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ஜூன் 27 அன்று அமெரிக்கா மேலும் தாக்குதல்களை மேற்கொண்டது.
இருப்பினும், அந்த மாதத்தின் பிற்பகுதியில் இரு தரப்பினரும் மோதல் நடவடிக்கைகளைக் கைவிட ஒப்புக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.












