ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது முக்கிய பருவநிலை கொள்கையில் பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்வதற்கான புதிய முன்மொழிவுகளை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கான பசுமைக்குடில் வாயு உமிழ்வு கட்டுப்பாட்டு வரம்புகளைக் குறைக்கும் வேகம் மந்தமாக்கப்படவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உமிழ்வு வர்த்தக அமைப்பின் (ETS) விதிகளைத் தளர்த்தி, வணிக நிறுவனங்கள் தங்களது கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டதை விட கூடுதல் கால அவகாசம் வழங்குவதே இந்த சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
புதிய மாற்றங்களின்படி, கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முதலீடுகளைச் செய்ய ஒப்புக்கொள்ளும் குறிப்பிட்ட சில தொழில்துறைகள், தங்களின் உமிழ்வு வரம்புகளுக்கான சலுகைகளை முன்னதாக திட்டமிடப்பட்ட 2034ஆம் ஆண்டிற்குப் பதிலாக 2038ஆம் ஆண்டு வரை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளுக்கான சட்டங்களை உருவாக்கும் ஐரோப்பிய ஆணையம், இந்த மாற்றங்கள் 1990ஆம் ஆண்டின் அளவோடு ஒப்பிடுகையில் 2040ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை 90% குறைக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் நீண்டகால இலக்கோடு ஒத்துப்போவதை உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளது.
பசுமைக்குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ETS அமைப்பானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக முக்கியக் கருவியாக இருந்து வருகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய முன்மொழிவுகள் சட்டமாக மாறுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இந்த ஒப்புதல் செயல்முறைகள் நிறைவடைய சுமார் ஒரு வருடம் காலம் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.















