இலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த இரு மாவட்டங்களுக்கும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் 19.08.2026 நேற்று உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென தனியான பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படவேண்டும்
இலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் இல்லாத இரண்டு மாவட்டங்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி தான்.
2026 ஜனவரிமாதத்தின்படியான தரவுகளின்படி முல்லைத்தீவு இணைப்பு மாவட்டத்தில் 8500 குடும்பங்களுக்கு நீர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்தும் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
வடமாகாணத்தில் இதுவரை இல்லாதுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் மேற்படி பிராந்திய முகாமையாளர் காரியாலயங்களை கொண்டுவருவதில் உள்ள மட்டுப்பாடுகள் என்ன?
முல்லைத்தீவில் மொத்தமாக இதுவரை 921 சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவில் 79பேரும், புலுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவில் 109பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில் 171பேரும், துணுக்காய் பிரதேசசெயலாளர் பிரிவில் 168பேரும், மாந்தை கிழக்கு பிரதேசசெயலாளர் பிரிவில் 152பேரும் மணலாறு பிரதேச செயலாளர்பிரிவில் 240பேருமாக மொத்தம் 919 சிறுநீரக நோயாளிகள் கொடுப்பனவுகளைப் பெற்றுவருகின்றனர்.
முல்லைத்தீவுக்கென தனியாக பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் அமையும் போது இன்னும் முல்லைத்தீவில் சேவை வழங்கல் விரிவுபடுத்தப்படும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பொறியியல் தொழினுட்பத்தில் மாவட்டத்தில் முதலாம் நிலை பெற்ற மாணவன் பரமேஸ்வரன் பானுஜன் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துதான் மரணித்திருக்கிறார்.
900 இற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் முல்லைத்தீவில் உள்ளனர். இன்னும் பல இடங்களில் நீர் வழங்கல் வசதியை மேற்கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது.
எனவே காலந்தாழ்த்தாது மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் பிராந்திய முகாமையாளர் அலுவலகங்களை நிறுவவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.













