மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உறுப்பினர் நா.பகீரதன் நெருப்பு சட்டியுடன் திடீரென நுழைந்ததால் அங்கு ஆரவாரம் ஏற்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த உறுப்பினர் நா.பகீரதன்,
கல்லூண்டாய் குப்பை மேடானது அடிக்கடி எரிகிறது. இதனால் அங்கு இருக்கின்ற மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றனர்.
நேற்றும்கூட அந்த குப்பை மேடானது எரிகிறது. யாழ். மாநகர சபையானது பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.
இந்த பிரச்சினையானது எமது பிரதேச சபையிலும் பல திணைக்களங்களிலும் பேசப்பட்டிருப்பதுடன் ஊடகங்கள் வாயிலாகவும் வெளிக்கொணரபட்டது. ஆனால் இதுவரை எந்தவிதமான தீர்க்கமான முடிவும் எட்டப்படவில்லை.
கல்லூண்டாயில் பொலுத்தீன், பம்பஸ் உள்ளிட்ட கழிவு பொருட்கள் எரிவதன் மூலம் மக்கள் சுவாசம் சம்பந்தமான நோய்களை எதிர்கொள்கின்றனர். இதனை வெளிப்படுத்தும் முகமாக நான் இன்று பொலித்தீன் உள்ளிட்ட பொருட்களை எரித்துக்கொண்டு சபைக்குள் வந்தேன். எமது மக்கள் தினம் தினம் படுகின்ற துயரத்தை அடையாள ரீதியாக வெளிப்படுத்துகிறேன்.
குப்பைமேடு தொடர்பாக மானிப்பாய் தவிசாளர் க.ஜெசீதனின் செயற்பாடுகள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. மாநகர சபையின் கண்மூடித்தனமான செயற்பாட்டுக்கு தவிசாளர் துணை போகின்றார். ஏனெனில் இது சம்பந்தமாக நான் பல தடவைகள் கோரிக்கைகள் முன்வைத்தும் அது சம்பந்தமான எந்த விதமான நகர்களையும் தவிசாளர் முன்னெடுக்கவில்லை.
யாழ். மாநகர சபையிலும் மானிப்பாய் பிரதேச சபையிலும் ஆளுங்கட்சி இலங்கை தமிழரசு கட்சி என்பதால் தவிசாளர் க.ஜெசீதன் இந்த விடயத்தில் மாநகர சபைக்கு துணை போகின்றார் போல் தெரிகிறது. அவ்வாறு இல்லாமல் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். எமது மக்கள் பாதிக்கப்படுகின்ற வேளை காட்சிக்காகவோ மேலிடத்திற்காகவோ அவர் துணை போகின்றது என்பது ஒரு கேவலமான விடயம் என்றார்.














