குழந்தைகளின் இணையதள தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை (COPPA) மீறியதாகத் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அமெரிக்க நீதித்துறையுடன் 400 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கச் சமரச ஒப்பந்தத்தை டிக்டொக் (TikTok) நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் அனுமதியின்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்ததாகவும், பெற்றோர் கோரிக்கை விடுத்த போதிலும் அக்கணக்குகளை நீக்கத் தவறியதாகவும் டிக்டொக் மற்றும் அதன் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance) மீது அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. இச்சமரச ஒப்பந்தத்தின் கீழ், டிக்டொக் நிறுவனம் முதற்கட்டமாக 300 மில்லியன் டொலரை உடனடியாகச் செலுத்தவுள்ளதுடன், ‘மியூசிக்கலி’ (Musical.ly) நிறுவனத்திற்கு எதிரான முந்தைய உத்தரவு இரத்து செய்யப்பட்ட பின்னர் மீதமுள்ள 100 மில்லியன் டொலரைச் செலுத்தவுள்ளது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்கக் குழந்தைகள் மற்றும் பெற்றோரின் பாதுகாப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரல் ஸ்டான்லி இ. உட்வார்ட் ஜூனியர் தெரிவித்துள்ளார். நீண்டகால சட்டப் போராட்டங்களைத் தவிர்த்து அமெரிக்கப் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே உடன்பாடு எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள டிக்டொக் நிறுவனம், தன் மீதான குற்றச்சாட்டுகளை உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொள்ளாமலேயே இவ்வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















