தலவத்துகொட பகுதியில் இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாக இன்று காலை (19) துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இரவு களியாட்ட விடுதிக்குச் சென்றிருந்த குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த நபர் ஒருவரினால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர், எதிர் தரப்பினரை அச்சுறுத்துவதற்காக சுவரொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூடு தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்குச் சென்ற தலங்கம பொலிஸ் குழுவினர் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவரும் வர்த்தகர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இன்று (19) கடுவெல நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மதுவரித் திணைக்கள அதிகாரி, விக்ரமசிங்கபுர பகுதியில் உள்ள மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் பணிபுரிவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















