உத்தர பிரதேசத்தில், சட்டவிரோதமாக இயங்கிய கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 6 ஆக அதிகரித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில், சட்டவிரோதமாக கல் குவாரிகள் இயங்கி வருகின்றன.
இங்கு தனியாருக்கு சொந்தமான கல் குவாரியில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 15ம் திகதி பணியாற்றி வந்தனர்.
அப்போது, குவாரியின் மேலடுக்கில் இருந்த பெரிய பாறைகளில் துளையிடும் பணியின்போது, எதிர்பாராதவிதமாக விரிசல் ஏற்பட்டு, சரிந்து விழுந்துள்ளது.
இதில், அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பலர் புதையுண்ட நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், கல் குவாரியில் சிக்கிய தொழிலாளி ஒருவரின் உடலை மீட்டனர்.
இதற்கிடையே, மாநில அமைச்சரும் அத்தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சஞ்சீவ் குமார் நேரில் சென்று பார்வையிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து, மற்றவர்களை மீட்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களில் ஐந்து தொழிலாளர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.














