அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு செலவுகள் மற்றும் பொருளாதாரம் குறித்த அவநம்பிக்கை காரணமாக ஊழியர்களின் பணி நேரத்தையும் வேலைகளையும் குறைக்க இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பெரும்பாலான பெரிய சில்லறை விற்பனையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக அமைப்பான பிரிட்டிஷ் சில்லறை கூட்டமைப்பு நடத்திய அண்மைய கணக்கெடுப்பின்படி, சில்லறை நிறுவனங்களின் நிதித் தலைவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அதாவது 61 சதவீதம் பேர் வேலை நேரத்தைக் குறைக்க அல்லது கூடுதல் நேரத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவற்றுள் 55 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தலைமை அலுவலக வேலைகளைக் குறைப்பதாகவும், 42 சதவீதம் பேர் சில்லறை விற்பனை நிலையங்களில் வேலைகளைக் குறைப்பதாகவும் கூறினர்.
AI சந்தைப்படுத்தல் மற்றும் பங்கு மேலாண்மை கருவிகள் முதல் தனியாங்கி பணம் சேகரிக்கும் கருவிகள் வரை புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக சில்லறை விற்பனைத் துறை கடந்த ஆண்டில் 74,000 வேலைகளை இழந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு செலவுகள் 5 பில்லியன் பவுண்ட்ஸ் அதிகரித்த பின்னர், முதலாளியின் தேசிய காப்பீட்டு பங்களிப்புகள் அதிகரிப்பு மற்றும் சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்ததன் விளைவாக, தொழிலாளர் தேவைகளைக் குறைக்க அதிக தொழில்நுட்பம் மற்றும் பிற உற்பத்தித்திறன் தந்திரங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.














