பிரித்தானியாவின் பிளனாவ் க்வென்ட் (Blaenau Gwent) பகுதியில், குடியிருப்பு வீதிகள் வழியாக அதிவேகமாக கார் பந்தயத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம், பிரின்மாவ் (Brynmawr) பகுதியில் உள்ள கிங் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
32 வயதான ஜே பெய்லிஸ் (Jay Bayliss), தனது வாகனத்தை குடியிருப்புப் பகுதியிலுள்ள வேகக் கட்டுப்பாட்டை மீறி, மணிக்கு 80 மைல்களுக்கும் அதிகமான வேகத்தில் செலுத்தியுள்ளார்.
இதன்போது நிலைதடுமாறிய கார் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெய்லிஸின் காதலி, 20 வயதான சோஃபி பிரிம்பிள் (Sophie Brimble) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக ஜே பெய்லிஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நியூபோர்ட் நீதிமன்றத்தில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.
இதேவேளை, இந்த கார் பந்தயத்தில் ஈடுபட்ட மற்றொரு ஓட்டுனருக்கு , 2019-லேயே எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், விபத்தின்போது பலத்த காயமடைந்திருந்த ஜே பெய்லிஸ், அப்போது விசாரணைக்கு ஆஜராகும் உடல்நிலையில் இல்லாததால் அவர் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது உடல்நிலை தேறியுள்ள நிலையில் அவர் மீதான விசாரணை தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













