லண்டனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ‘அல் குத்ஸ் தின’ (Al Quds Day) பேரணிக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் லண்டனில் நடைபெறும் அல் குத்ஸ் தினப் பேரணிக்கு இம்முறை மெட்ரோபொலிட்டன் பொலிஸார் விடுத்த கோரிக்கையை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதன்படி, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஈரானுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான பதற்றமான நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, “பாரிய பொது அமைதிச் சீர்குலைவைத்” தடுப்பதற்காக இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
“போராட்டத்தின் அளவு மற்றும் அதற்கு எதிராக நடத்தப்படவுள்ள எதிர்-போராட்டங்களைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இத்தடை அவசியம் என தான் நம்புவதாக ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டாலும், கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று போராட்டம் (Stationary demonstration) நடத்த அனுமதிக்கப்படலாம் எனவும்
அமைதியான போராட்ட உரிமையைத் தாண்டி வெறுப்புணர்வை விதைப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தடை புதன்கிழமை மாலை 4:00 மணி முதல் ஒரு மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் எனவும் லண்டனில் 2012-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு போராட்டப் பேரணிக்குத் தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் எனவும் ஈரானிய ஆதரவு அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்படும் இந்தப் பேரணி, தற்போதைய சூழலில் தனித்துவமான அச்சுறுத்தல்களைக் கொண்டுள்ளது” எனவும் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் இந்தப் பேரணியைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.














