உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களை மீட்கும் பணி இடம்பெற்றுவருகிறது.
நொய்டாவின் செக்டர் 4க்கு அருகிலுள்ள ஹரோலா பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.
அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகளவில் இருந்ததால், தீ வேகமாக பிற பகுதிகளுக்கும் பரவியது.
சம்பவ இடத்திலிருந்து கரும்புகை மூட்டம் வெளியேறியது.
இதேவேளை, மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தொழிற்சாலையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ஊழியர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், இரவுப் பணியில் இருந்த சுமார் 10 முதல் 15 ஊழியர்கள் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் சில தொழிலாளர்கள் 2வது மாடியிலிருந்து கீழே குதித்தும் உயிரைக் காப்பாற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொழிற்சாலையில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் ரசாயனப் பொருட்கள் எரிவதால் வெளியாகும் நச்சுப் புகையால், அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
















