பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான பாதி தூரத்தை ஆர்டெமிஸ் II விண்கலக் குழுவினர் கடந்து செல்லும்போது எடுத்த பூமியின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
நமது மிக அருகிலுள்ள விண்வெளி அண்டை கிரகத்தை நோக்கிய பயணப்பாதையில், விண்கலக் குழுவினர் தங்களின் இறுதி எஞ்சின் எரிப்பை வெள்ளிக்கிழமை நிறைவுசெய்த பின்னர், அந்தத் திட்டத்தின் தளபதி ரீட் வைஸ்மேன் பூமியின் இந்த பிரமிக்க வைக்கும் படங்களை எடுத்தார் என்று நாசா கூறுகிறது.
ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து 142,000 மைல்கள் (228,500 கி.மீ.) தொலைவிலும், சந்திரனிலிருந்து 132,000 மைல்கள் தொலைவிலும் இருந்த நிலையில் இநத்ப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
‘Hello, World’ என்று அழைக்கப்படும் இந்தப் படம் பூமி சூரியனை மறைக்கும்போது ஏற்படும் வளிமண்டல ஒளியாலும், இரு துருவங்களிலும் தோன்றும் பச்சை நிற துருவ ஒளிகளாலும் சூழப்பட்ட, பரந்து விரிந்த நீல அட்லாண்டிக் பெருங்கடலைக் காட்டுகிறது.
இந்தப் படங்கள் நாசா, குழுவினர் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் சந்திரனை நோக்கி செலுத்தும் எரிப்பு செயல்முறையை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் எடுக்கப்பட்டவை.
ஓரியன் விண்கலத்தில் உள்ள நான்கு விண்வெளி வீரர்கள் 200,000 மைல்களுக்கும் அதிகமான தொலைவில் உள்ள நிலவிற்குப் பயணிக்க இலக்கு வைத்துள்ள நிலையில், இந்த எரிப்பு நிகழ்வு அதனை புவி சுற்றுவட்டப்பாதையிலிருந்து வெளியேற்றியுள்ளது.
ஆர்டெமிஸ் II தற்போது ஒரு வளையப் பாதையில் உள்ளது; இது குழுவினரை நிலவின் மறுபக்கத்தைச் சுற்றி அழைத்துச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பக் கொண்டுவரும்.
1972 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மனிதர்கள் புவியின் சுற்றுவட்டப்பாதைக்கு வெளியே பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.
குழுவினர் ஏப்ரல் 6 அன்று நிலவின் மறுபக்கத்தைச் சுற்றி வந்து, ஏப்ரல் 10 அன்று பூமிக்குத் திரும்புவார்கள்.
2026 ஆம் ஆண்டின் பூமியின் தோற்றத்தையும், மனிதர்கள் கடைசியாக நிலவில் கால் பதித்த 1972 ஆம் ஆண்டில் அப்பல்லோ 17 குழுவினரால் எடுக்கப்பட்ட இதே போன்ற ஒரு படத்தையும் நாசா அருகருகே வைத்து ஒப்பிட்டுக் காட்டியுள்ளது.














