தமிழக முதல்வர் ஸ்டாலின் நெருப்புடன் விளையாடுகிறார்,” என பா.ஜ.,வைச் சேர்ந்த டில்லி முதல்வர் ரேகா குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின், ‘பிக்கி புளோ மகளிர் அமைப்பு’ சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடந்தது. இதில், டில்லி முதல்வர் ரேகா குப்தா பங்கேற்றார்.
அவர் அளித்த பேட்டியில்,
லோக்சபா தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்; இந்தியா எனும் பெரு நெருப்போடு விளையாடுகிறார்.
பார்லியில் முழு பெரும்பான்மையுடன் அந்த மசோதா நிறைவேறும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்பது மிகப்பெரிய சமூக சீர்திருத்தம்; வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று. பெண்களுக்கு முடிவெடுக்கும் சக்தி கொண்ட அரசியல் அதிகாரத்தை உறுதி செய்வதோடு, ஒருங்கிணைந்த ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், வலுவான பொருளாதார அடித்தளமிடப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன; ரயில்வே நவீனப்படுத்தப்படுகிறது; விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், சிறு நகரங்களில் கூட சுற்றுலா மேம்படுகிறது. கோவை போன்ற வேகமாக வளரும் தொழில் நகரத்தில் மெட்ரோ ரயில் திட்டம் வராதது, வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
















