ஸ்பெயினின் ஐந்தாம் டிவிஷன் கால்பந்து அணியான கூர்னேயா (Cornellà) அணியை அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி வாங்கியதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
கத்தலோனியா பகுதியை தளமாகக் கொண்ட இந்தக் கிளப், இளம் வீரர்களை உருவாக்கும் திறமையான அகாடமியாக அறியப்படுகிறது. இந்தக் கிளப்பில் பயிற்சி பெற்ற முன்னணி வீரர்களில் ஜோர்டி ஆல்பா, ஜெரார்ட் மார்ட்டின் மற்றும் டேவிட் ராயா ஆகியோர் அடங்குவர்.
‘லியோனல் மெஸ்ஸியின் வருகை, கிளப்பின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது. விளையாட்டு மற்றும் நிர்வாக வளர்ச்சியை முன்னேற்றுவதோடு, கிளப்பின் அடித்தளத்தை வலுப்படுத்தவும், திறமைகளை தொடர்ந்து மேம்படுத்தவும் இது உதவும்’ எனக் கிளப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால நோக்கத்துடன் லியோனல் மெஸ்ஸி இந்த கிளப்பை வாங்கியுள்ளார். உயர்ந்த இலக்குகள், உள்ளூர் சமூகத்துடன் வலுவான தொடர்பு ஆகியவற்றுக்கு மெஸ்ஸி உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோர்டி ஆல்பா, பார்சிலோனா அணியில் இணைவதற்கு முன் இரண்டு ஆண்டுகள் இந்த கூர்னேயா அகாடமியில் பயிற்சி பெற்றவர். அதேபோல், இலியே சாஞ்சஸும் இந்த அகாடமி மூலம் வளர்ந்து பின்னர் பார்சிலோனா ‘பி’ அணியில் இணைந்தார். தற்போது அவர் அமெரிக்காவின் ஆஸ்டின் கால்பந்து அணியில் விளையாடி வருகிறார்.
அணியின் உரிமையாளராக மெஸ்ஸிக்கு இது முதல் அனுபவம் அல்ல. இவரும் லூயிஸ் சுவாரேஸும் இணைந்து உருகுவேயின் டிபோர்ட்டிவோ எல்.எஸ்.எம் என்ற அணியை ஏற்கெனவே வாங்கியுள்ளனர். மேலும், இளம் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில், கடந்த டிசம்பரில் ‘Messi Cup’ என்ற போட்டியில் 16 வயதுக்குட்பட்ட எட்டு அணிகளை அவர் ஏற்பாடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.














