தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா கடற்படை இடைமறித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நிறுத்தும்படி விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்குப் பதிலளிக்கத் தவறியதால், டூஸ்கா (TOUSKA) என்ற ஈரானிய கப்பலை அமெரிக்கக் கடற்படை கைப்பற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் எழுதியுள்ளார்.
அதேநேரம், இந்த நடவடிக்கை போர் நிறுத்த மீறல் என்றும், இந்த ஆயுதமேந்திய கடற்கொள்ளை செயலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது.
பாகிஸ்தானில் ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றொரு தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குவார் என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
தெஹ்ரான் தனது பங்கேற்பை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்க முற்றுகை அமுலில் இருக்கும் வரை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டார்கள் என்று ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெப்ரவரி 28 அன்று ஈரான் முழுவதும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் இந்த மோதல் தொடங்கியது.
இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை, ஐந்து வாரங்களுக்கு மத்திய கிழக்கு முழுவதும் தொடர் தாக்குதல்கள் நடந்தன.
இந்த போர் நிறுத்தம் வரும் புதன்கிழமை முடிவடைய உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, டிரம்ப் கடற்படை முற்றுகையை அறிவித்தார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இன்னும் சர்ச்சையில் உள்ளன.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை (19), இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தானுக்கு தனது பிரதிநிதிகள் திங்கட்கிழமை வருவார்கள் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.














