வட அயர்லாந்தின் டன்முரி (Dunmurry) பகுதியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.
வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகருக்கு அருகிலுள்ள டன்முரி பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நேற்றுமுன்தினம் இரவு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில், இரண்டு பச்சிளம் குழந்தைகள் உட்படப் பல குடியிருப்பாளர்கள் உயிர் தப்பியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு பெல்பாஸ்டின் ட்வின்ப்ரூக் (Twinbrook) பகுதியில் உணவு விநியோகம் செய்யும் ஒருவரின் கார் கடத்தப்பட்டு (Hijack), அதன் பின்பகுதியில் எரிவாயு சிலிண்டர் மூலம் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டது.
பின்னர், அந்த வாகனத்தைச் சாரதி மிரட்டப்பட்டு டன்முரி பொலிஸ் நிலையத்திற்கு ஓட்டிச் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கார் கைவிடப்பட்டதைக் கவனித்த அதிகாரிகள், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது உடனடியாகச் செயல்பட்டு அருகிலிருந்த வீடுகளில் இருந்தவர்களை வெளியேற்றினர்.
குடியிருப்பாளர்கள் மற்றும் இரண்டு பச்சிளம் குழந்தைகளை அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த போதே அந்த வாகனம் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறித் தீப்பிடித்தது.
இதேவேளை, கடந்த மாதம் லர்கன் (Lurgan) பகுதியில் நடந்த வெடிப்புச் சம்பவத்துடன் இதற்குத் தொடர்பு இருப்பதால், இதன் பின்னணியில் ‘நியூ ஐ.ஆர்.ஏ’ (New IRA) என்ற தீவிரவாத அமைப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் இந்த விபத்து குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸ் அதிகாரிகளின் துரிதமான மற்றும் துணிச்சலான நடவடிக்கையினால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














