சவுதி அரேபியாவின் எல்லைகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவுதி அரேபியா, ஈரான் மீது இரகசியமாகத் தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை நடத்தியதாக மேற்கத்திய மற்றும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது, மத்திய கிழக்கு போரில் முன்னர் வெளியிடப்படாத ஒரு பதற்ற அதிகரிப்பை வெளிப்படுத்துகிறது.
மார்ச் மாத இறுதியில் சவுதி விமானப்படையால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல்கள், ஈரானிய மண்ணில் சவுதி மேற்கொண்ட முதல் நேரடி இராணுவ நடவடிக்கையாகும்.
இரண்டு மேற்கத்திய அதிகாரிகளும் இரண்டு ஈரானிய அதிகாரிகளும் இந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஈரானுக்குள் உள்ள துல்லியமான தாக்குதல் இலக்குகள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து தூண்டப்பட்ட, வேகமாக விரிவடைந்து வரும் பிராந்தியப் போருக்கு மத்தியில் இந்த இரகசியத் தாக்குதல்கள் நடந்தன.
அன்று முதல், ஈரான் வளைகுடா நாடுகளை இலக்காகக் கொண்டு ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவி, அப்பிராந்தியம் முழுவதும் உள்ள இராணுவத் தளங்கள், விமான நிலையங்கள், பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி வசதிகளைக் குறிவைத்துள்ளது.
ரொய்ட்டர்ஸ் செய்திப்படி, சவுதி தாக்குதல்களைத் தொடர்ந்து அந்நாட்டின் மீதான ஈரானியத் தாக்குதல்கள் கணிசமாகக் குறைந்தன.
சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கைகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஏப்ரல் 1 முதல் 6 வரை 25-க்கும் சற்று அதிகமான தாக்குதல்கள் மட்டுமே நடந்திருந்த நிலையில், மார்ச் 25 முதல் 31 வரையிலான வாரத்தில் 105-க்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
பல ஆண்டுகளாக, சவுதி அரேபியா பிராந்தியப் பாதுகாப்பிற்காக, குறிப்பாக ஈரானிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக, அமெரிக்காவை பெரிதும் சார்ந்திருந்தது.
இருப்பினும், தற்போதைய போர் வளைகுடா பாதுகாப்பு அமைப்பில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது; ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பிராந்தியப் பாதுகாப்பு அரண்களை ஊடுருவியதாகக் கூறப்படுகிறது.
தனது பிராந்தியத்தின் மீதான நேரடித் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ரியாத் மேலும் உறுதியான இராணுவ நிலைப்பாட்டை எடுத்து வருவதாக இந்தத் தாக்குதல்கள் தெரிவிக்கின்றன.
சவுதி அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளைப் பகிரங்கமாக உறுதிப்படுத்தாத நிலையில், பதற்றத்தைத் தணிப்பதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் ரியாத்தின் ஆதரவை ஒரு மூத்த சவூதி வெளியுறவு அமைச்சக அதிகாரி மீண்டும் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஈரானிய அதிகாரிகளும் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.















