மல்வானை பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் (UGC) ஒப்படைப்பதற்குப் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (Anter University Students’ Federation – Anthare) அங்கிருந்து வெளியேறியுள்ளது.
தொம்பே பிரதேச செயலகத்தின் பொறுப்பின் கீழ் மல்வானை பகுதியில் அமைந்துள்ள சொகுசுக் காணி மற்றும் வீட்டை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் (UGC) ஒப்படைப்பதற்குப் பிரதமர் உத்தியோகபூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளார் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இன்று (18) பிரதமர் அலுவலகத்தில் பிரதமருக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் இணைப்பாளர் சசிந்து பெரேரா இந்த விபரங்களை வெளியிட்டார்.
இதன்போது , “மல்வானை பகுதியில் அமைந்துள்ள இந்தக் காணி மற்றும் கட்டிடத் தொகுதியை மிகக் குறுகிய காலத்திற்குள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மாற்றுவதற்கு இன்றைய பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டது.
வரும் நாட்களில் இதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பிரதமர் எமக்கு உறுதியளித்துள்ளார்.
மாணவர் சமூகமாக நாங்கள் நீண்டகாலமாகக் கோரி வந்த நியாயமான விடயத்திற்கு அரசாங்கத் தரப்பிலிருந்து தற்போது சாதகமான பதில் கிடைத்துள்ளது.
இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து, மல்வானை காணி வளாகத்திற்குள் தங்கியிருந்த நாங்கள் உள்ளிட்ட மாணவர் குழுவினர், இந்த நேரத்தில் அங்கிருந்து முழுமையாக வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.”
மல்வானை பகுதியில் அமைந்துள்ள இந்தக் காணி மற்றும் சொகுசு வீடு, கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த ஒரு பொதுச்சொத்தாகும்.
இதனைப் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி மற்றும் விடுதிப் பயன்பாடுகளுக்காகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கடந்த சில நாட்களாக அந்த வளாகத்தை முற்றுகையிட்டுத் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் இந்த உறுதியான வாக்குறுதியை அடுத்து, மல்வானை வளாகத்தில் நிலவிய பதற்ற நிலை தற்போது சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.













