அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று (18) அதிகாலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையில் கடும் பாதுகாப்பில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியான கொட்டவேஹெரா கிராமத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட நிலையில் நேற்றுமுன்தினம் (17) இரவு அம்பாறை முகாம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அம்பாறை தலைமையக பொலிஸார் சந்தேக நபரை நேற்று( 18) அம்பாறை வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்து சென்ற நிலையில் குறித்த சந்தேக நபர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி சென்றிருந்தார்.
இந்நிலையில் தப்பி சென்ற குறித்த சந்தேக நபரை பின்தொடர்ந்த பொலிஸார் கடும் பிரயத்தனம் கொண்டு துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து கைது செய்தனர்.
இதன் போது பொலிஸாரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்ற சந்தேக நபரை அதே துப்பாக்கியினால் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக பொலிஸாரினால் சுடப்பட்டார்.
இதன் போது சந்தேக நபரின் தொடைப் பகுதியில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபரை கைது செய்த பின்னர் அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்தனர்.
தற்போது சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபரின் பாதுகாப்பை உறுதி செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













