ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே, தெரிவுக் குழுவை மறுசீரமைப்பதாகக் கூறி தன்னை பதவியில் இருந்து நீக்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும் எடுத்த முடிவு குறித்து, தனக்கு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்று அந்த கடிதத்தில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரமோத்ய விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
முறைப்படியான எழுத்துப்பூர்வ அறிவித்தல் ஒன்றை வழங்குவதன் மூலமே, தனது பொறுப்புகளை முறையான மற்றும் தொழில்சார் முறையில் பூர்த்தி செய்து ஒப்படைக்க முடியும் என்றும், அத்துடன் தனது தனிப்பட்ட சேவை ஆவணங்களில் பதவிக்காலம் நிறைவடைந்த விபரங்களைச் சரியாகப் பதிவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை முன்னிட்டு எடுக்கப்படும் இவ்வாறான நிர்வாக ரீதியிலான மூலோபாய முடிவுகளைத் தான் மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள பிரமோத்ய விக்ரமசிங்க, எவ்வாறாயினும், ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்குள் தன்னை ஏன் நீக்கினார்கள் என்பதற்கான தெளிவான விளக்கம் அல்லது காரணத்தை அதிகாரிகள் தனக்கு வழங்க வேண்டும் என தனது கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.














