மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் (Central Expressway) ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதிக்கான நிர்மாணப் பணிகள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் பிரிவின், இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த விசேட அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான இப்பகுதி மொத்தம் 18.7 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்டதாகும்.
இந்தப் பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக மாத்திரம் 112.4 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் பிரிவின் முதற்கட்டமாக, பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் தற்போது அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பணிகளுக்காக 78 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இப்பணிகள் அனைத்தும் அடுத்த வருடத்தின் (2027) நடுப்பகுதியில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாபெரும் நெடுஞ்சாலைத் திட்டத்தின் விசேட அம்சம் என்னவெனில், இதற்கான முழுமையான நிதியுதவிகளும் உள்நாட்டு நிதிகள் மூலமாகவே பெறப்பட்டுள்ளன.
அத்துடன், வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பின்றி, முழுப் பணிகளும் இலங்கையின் உள்நாட்டு ஒப்பந்த நிறுவனங்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பகுதி நிறைவடையும் பட்சத்தில் கொழும்பில் இருந்து கண்டி மற்றும் கலகெதர போன்ற பகுதிகளுக்கான பயண நேரம் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.














