ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூசண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றிப்பெறும் அணி ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுரு அணியுடன் இறுதிப்போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி சுற்று 1ல் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியிடம் 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
அந்த ஆட்டத்தில் அணித்தலைவராக சுப்மன் கில்லின் பல்வேறு முடிவுகள் விமர்சனங்களுக்கு வழிவகுத்தன.
குறிப்பாக நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடாமல் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார்.
ஆடுகளம் ஓட்டங்கள் குவிப்புக்கு கடினமாக இருந்த நிலையில் எளிதான பல்வேறு கேட்ச்களை குஜராத் அணி வீரர்கள் தவறவிட்டனர்.
இதை பயன்படுத்திக் கொண்ட ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கையே புரட்டிப் போட்டார்.
255 ஓட்டங்கள் இலக்கை துரத்திய குஜராத் அணியில் அழுத்தம் காரணமாக பவர்பிளேவிலேயே 5 விக்கெட்களை தாரை வார்த்ததால் அதன் பின்னர் மீள முடியாமல் போனது.
இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு 2-வது முறையாக கிடைத்துள்ள வாய்ப்பை குஜராத் அணி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக் கூடும்.
துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் குஜராத் அணி அணி தங்களுடைய டொப் 3 துடுப்பாட்ட வீரர்களான சுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரையே பெரிதும் நம்பியிருக்கிறது.
இவர்கள் ஓட்டங்கள் குவிக்கத் தவறினால், போட்டியைத் தங்கள் பக்கம் திருப்பக்கூடிய துடுப்பாட்ட பலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மத்திய வரிசையில் இல்லை.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்குகிறது. அந்த ஆட்டத்தில் 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில், 12 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்களை விளாசி மிரட்டியிருந்தார்.
அவரிடம் இருந்து மேலும் ஒரு மிரட்டலான துடுப்பாட்டம் வெளிப்படக்கூடும்.
எனினும் அவருக்கு முகமது சிராஜ், காகிசோ ரபாடா ஆகியோர் நெருக்கடிதரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் அதிவேகம் மற்றும் ஸ்விங்கால் பலம் சேர்த்து வருகிறார்.
நடப்பு தொடரில் 24 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்களை வீழ்த்தி உள்ள வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் ஆர்ச்சர், குஜராத் டைட்டன்ஸ் அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 31-ம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

















