பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் (Andrew Mountbatten-Windsor), வர்த்தக தூதராகப் பணியாற்றிய காலத்தில் அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதை உறுதிப்படுத்தும் முக்கிய மின்னஞ்சல்கள், 6 ஆண்டுகளுக்கு முன்பே பக்கிங்ஹாம் அரண்மனையிடம் (Buckingham Palace) ஒப்படைக்கப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவல் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் சர்ச்சைக்குரிய நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய சுமார் 30,000 மின்னஞ்சல்களின் காப்பகம் , கடந்த 2020ஆம் ஆண்டிலேயே அரச குடும்பத்தின் மிக மூத்த அதிகாரியான ‘லார்ட் சேம்பர்லெய்னிடம்’ (Lord Chamberlain) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஆண்ட்ரூவின் தனிப்பட்ட வணிகத் தொடர்பாளர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட இந்த மின்னஞ்சல்கள், நீண்டகாலமாக சர்ச்சைக்குட்பட்டிருந்தன.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஆவணங்களின்படி, இந்த 30,000 மின்னஞ்சல்களின் நகல் 2020 மே மாதத்தில் ‘லார்ட் சேம்பர்லெய்னிடம்’ வழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்த மற்றொரு உயர் நீதிமன்றத் தீர்ப்பு, 2020 ஜூலை 10ஆம் திகதியிட்ட மின்னஞ்சல் ஒன்றைக் குறிப்பிட்டு, இந்த விபரங்கள் அனைத்தும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு “வழங்கப்பட்டுவிட்டன” என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், தற்போதைய பொலிஸ் விசாரணைகள் தொடங்குவதற்குப் பல வருடங்களுக்கு முன்பே, ஆண்ட்ரூவின் நிதி முறைகேடுகள் மற்றும் ரகசியத் தகவல் கசிவு குறித்த விபரங்கள் அரண்மனை அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது தற்போது நிரூபணமாகியுள்ளது.
பொதுப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் அண்மையில் மவுண்ட்பேட்டன்-வின்சர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்களைப் பொலிஸாரிடம் முன்வந்து விபரங்களை வழங்குமாறு ‘தேம்ஸ் வேலி பொலிஸார்’ (Thames Valley Police) கடந்த வாரம் புதிய வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த மின்னஞ்சல் சர்ச்சை மற்றும் அரண்மனையின் மெத்தனப் போக்கு குறித்துப் பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளரிடம் கேட்கப்பட்டபோது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மவுண்ட்பேட்டன்-வின்சர் தொடர்பாகத் தற்போது பொலிஸ் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதால், இந்த விவகாரங்கள் குறித்து எம்மால் எந்தவொரு கருத்தையும் தற்போதைக்கு வெளியிட முடியாது.
ஏற்கனவே பல்வேறு பாலியல் மற்றும் நிதி மோசடிப் புகார்களால் தனது ‘இளவரசர்’ பட்டத்தை இழந்த ஆண்ட்ரூ, தற்போது அரசாங்க ரகசியங்களை வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களுக்காகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளமை பிரித்தானிய அரச குடும்பத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.















