முள்ளிவாய்க்கால் மண்ணில் ஈழத்தமிழினம் கொன்றழிக்கப்பட்ட இறுதிப் போரின் போது, சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டது என்பதை, இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே (Admiral Jayanath Colombage) பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேசக் கல்வி மையத்தில் அண்மையில் உரையாற்றிய அவர், இரண்டாயிரத்து ஆறு முதல் இரண்டாயிரத்து ஒன்பது வரையான காலப்பகுதியில், கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் சீனா தனது சொந்தப் பாதுகாப்புக் கிடங்குகளை அமைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப் பத்திரத்துடன் அங்குக் சென்று, ஒரு ஷொப்பிங் பட்டியலைப்போலத் தமக்குத் தேவையான பேரழிவு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, போர்க்களத்தில் உடனடியாகப் பயன்படுத்தியதாகவும், அதற்கான பணத்தை பின்னரே செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் உடல்கள் சிதறிக்கொண்டிருந்த போது, ஆயுத விநியோகம் செய்த அதே சீன நிறுவனங்கள் தான், போர் முடிந்த மறுதினமே கட்டுமான நிறுவனங்களாக அவதாரமெடுத்தன என்றும் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், தென்னிலங்கையைத் தனது கடன்பொறிக்குள் வீழ்த்திய சீனா, தற்போது மென் அதிகார அரசியல் ஊடாக வடக்குக் கிழக்கின் கடல் வளங்களையும், நிலப்பரப்புகளையும் கைப்பற்றத் தந்திரமாக நகர்வதாகத் தமிழ் தேசிய ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழர்களுக்கான நீதியைத் தடுத்து நிறுத்தும் சீனா, வாழ்வாதார உதவிகள் என்ற போர்வையில் தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிக்க முயல்வதாகவும், இந்தச் சதிவலை குறித்துத் தமிழ் சமூகம் விழிப்படைய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.














