Paris Saint-Germain அணி சாம்பியன்ஸ் லீக் வெற்றியைத் தொடர்ந்து பரிஸில் ஏற்பட்ட கலவர சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் மீது விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கைது செய்யப்பட்ட பலர் மீது உடனடி நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில், சிலருக்கு சிறைத் தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
22 வயதுடைய Raphaël D என்பவர், நண்பர்களுடன் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரை அவமதித்ததுடன், போதையிலிருந்தபோது அதிகாரியொருவரை தாக்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. நீதிமன்றத்தில் திட்டமிட்ட தாக்குதல் நடத்தவில்லை என மறுத்தார். இருப்பினும், நீதிமன்றம் அவருக்கு 12 மாத சிறைத் தண்டனை விதித்ததுடன், அதில் ஆறு மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட தண்டனையாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அல்ஜீரியாவைச் சேர்ந்த 20 வயதுடைய Hichem S மீது கால்பந்து ரசிகரின் சங்கிலியை திருடியதாகவும், காவல்துறையினரை அவமதித்து தாக்கியதாகவும் வழக்கு தொடரப்பட்டது. நண்பர்களுடன் கொண்டாட்டத்திற்காகவே பரிஸுக்கு வந்ததாக அவர் தெரிவித்த போதிலும், அவரது விளக்கங்களை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதனால் அவருக்கு 10 மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத் தண்டனையும், ஐந்து ஆண்டுகள் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
மேலும், 18 வயதுடைய Amer K என்பவரின் வாகனத்தில் பல வெடிகுண்டு பொருட்கள், புகை குண்டுகள், டேசர் மற்றும் கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அனைத்தும் விற்பனைக்காக வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார். நீதிமன்றம் அவருக்கு 10 மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத் தண்டனையும், ஐந்து ஆண்டுகள் ஆயுதம் வைத்திருக்கத் தடை விதித்தது. இதேவேளை, காவல்துறையினர் மீது வெடிகுண்டு ஏவியதாக குற்றம் சாட்டப்பட்ட 18 வயதுடைய Tiziano P மீது போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.

















