முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, அவசர மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றிரவு (07) அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவரது உடல்நிலைக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டதை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் அவசர சிகிச்சைப் பிரிக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, சல்லே குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) விளக்கமறியல் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் பெப்ரவரி 25 ஆம் திகதி சிஐடியால் கைது செய்யப்பட்டு, அன்று முதல் விளக்கமறியல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
முந்தைய அறிக்கைகளின்படி, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) காவலில் இருந்தபோது, தனக்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டி சல்லே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார்.
இருப்பினும், சந்தேக நபருக்கு எதிராக எந்தவொரு தாக்குதலோ அல்லது கொடூரமான நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி, இலங்கை பொலிஸார் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர்.













