மத்திய கிழக்கில் மீண்டும் வன்முறை வெடித்து, பலவீனமான போர் நிறுத்தத்தைச் சோதித்த ஒரு கொந்தளிப்பான நாளில், இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளை நோக்கி ஏவுகணைகள் தொடர்ச்சியாக ஏவப்பட்டதற்குப் பதிலடியாக ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக டெல் அவிவ் ஞாயிற்றுக்கிழமை (07) கூறியது.
தெஹ்ரானுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் நெருங்கிவிட்டதாகக் கூறிய ஜனாதிபதி ட்ரம்ப், தாக்குதலைத் தள்ளிப்போடுமாறு எச்சரித்தபோதிலும், ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு பதிலடி கொடுப்போம் என்ற தனது வாக்குறுதியை இஸ்ரேல் நிறைவேற்றியது.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்குமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் கூட்டாளிகள் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து அழுத்தத்திற்கு உள்ளானதன் பின்னணியில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.
ஈரானுடனான பரந்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கும் வகையில், லெபனானில் தனது தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்ப் இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறார்.
கடந்த வாரம் தொலைபேசி உரையாடல் ஒன்றில் நெதன்யாகுவை கடினமான வார்த்தைகளால் கண்டித்ததும் இதில் அடங்கும்.
எனினும், கடந்த வாரம் லெபனானுக்கான போர்நிறுத்தத் திட்டத்தை அமெரிக்கா அறிவித்த பின்னர், இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை முன்னதாக பெய்ரூட் பகுதியில் முதல் முறையாகத் தாக்குதல்களை நடத்தியது.
பதிலடியாக ஈரான், இஸ்ரேலிய இலக்குகள் மீது ஏவுகணைகளை சரமாரியாகத் தாக்கியதால், அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆபத்தில் சிக்கின.
ஆனால், பரந்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாடு எட்டப்படும் தூரத்திலேயே உள்ளது என்று ட்ரம்ப் வலியுறுத்தினார்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள் ஈரானிய இராணுவ இலக்குகளைத் தாக்கியதாகக் கூறின.
வானிலிருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி, ஈரானுக்குள் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் புரட்சிகரக் காவலர்கள் தெரிவித்தனர்.
இந்த அண்மைய மோதல்கள், திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் எண்ணெய் விலைகளை 3%-க்கும் மேல் உயர்த்தின.
பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால விலை மீண்டும் ஒரு பீப்பாய்க்கு 96 டொலருக்கு மேல் சென்றது.
நசரேத் அருகே உள்ள ரமத் டேவிட் விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகரக் காவலர்கள் தெரிவித்தனர்.
ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டதாகவும், தனது பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை இடைமறித்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியது.















