பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் கடந்த ஓராண்டில் மாத்திரம் , மருத்துவ உலகில் ‘ஒருபோதும் நடந்திருக்கக் கூடாத கொடூரத் தவறுகள்’ என வகைப்படுத்தப்பட்ட 403 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய சுகாதார சேவை வெளியிட்டுள்ள வருடாந்த புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரஸ் அசோசியேஷன் (Press Association) நடத்திய ஆய்வில் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, அறுவைசிகிச்சை முடிவடைந்த பின்னர் நோயாளிகளின் உடலுக்குள்ளேயே மருத்துவப் பொருட்களை மறந்து வைத்துத் தைத்த 121 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, வேறு ஒரு நோயாளிக்குச் செய்ய வேண்டிய அறுவைசிகிச்சையை, தவறுதலாக மற்றொரு நோயாளிக்குச் செய்த 17 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன் ஒரு நோயாளிக்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் உறுப்பு பகுதி தவறுதலாக வெட்டி அகற்றப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
மேலும் உடலின் இடது பக்கத்திற்குப் பதிலாக வலது பக்கத்திலோ அல்லது தவறான பகுதியிலோ சிகிச்சை வழங்கிய 40 சம்பவங்களும், தவறான இடத்தில் ஊசி செலுத்திய 30 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இவைதவிர 9 நோயாளிகளுக்கு அவர்களின் இரத்த வகைக்குப் பொருத்தமில்லாத வேறு வகை இரத்தம் ஏற்றப்பட்டுள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கடுமையான விதிகள் உள்ள போதிலும்,நோயாளிகள் தவறுகளால் பாதிக்கப்பட்டுள்ளமை பிரிட்டன் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், மருத்துவப் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.














