ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தானிய தம்பதியினர் தங்களை விடுவிக்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை மீட்பதற்காகக் கைதிகள் பரிமாற்ற முறையை பிரித்தானிய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என அவர்களின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த கிரெய்க் மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன் (Craig and Lindsay Foreman) ஆகிய தம்பதியினர், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஈரானில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது ஈரானிய அரசாங்கத்தால் உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை இந்தத் தம்பதியினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
இவர்களின் மேல்முறையீட்டு மனுவும் ஈரான் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக இவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே இவர்களது மகன் அவர்களை மீட்பதற்காகக் கைதிகள் பரிமாற்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில் குறித்த கோரிக்கையை பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் (Foreign Office) நிராகரித்துள்ளது.













