வட அயர்லாந்தில் உள்ள ஷான்கில் வீதியில் (Shankill Road), இந்திய வம்சாவளியினருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று இனவெறி உந்துதல் காரணமாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு வாழும் இந்தியச் சமூகம் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக இந்திய சமூக மையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் நற்செய்தி மண்டபமாக இருந்த இந்தக் கட்டிடத்தைக் கடந்த ஆண்டு விலைக்கு வாங்கிய இந்திய வம்சாவளி உரிமையாளர், இன்னும் சில மாதங்களில் அங்கு புதிய வர்த்தக நிலையம் ஒன்றை திறக்கத் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் மர்ம நபர்களால் வைக்கப்பட்ட தீயில் அந்தக் கடை முற்றிலும் சேதமடைந்தது.
கடந்த 18 வருடங்களாக வட அயர்லாந்தில் வசித்து வரும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கடையின் உரிமையாளர் , இந்தத் தாக்குதலால் தனது வாழ்நாள் உழைப்பு வீணாகிவிட்டதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வட அயர்லாந்து பொலிஸார் ‘இனவெறி வெறுப்புக் குற்றம்’ என்ற அடிப்படையில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.














