ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கும் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் இந்த வார இறுதியிலேயே கையெழுத்திடக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (11) கூறினார்.
எனினும், ஓர் ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை என ஈரான் பதிலளித்தது.
இந்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டால், ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்து, உலகளாவிய எரிசக்தி விலைகளைக் கடுமையாக உயர்த்திய மூன்று மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மிக முக்கியமான இராஜதந்திர முன்னேற்றமாக இது அமையும்.
பேச்சுவார்த்தையில் உள்ள உரையின் பெரும்பகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன, ஆனால் ஈரான் தனது சிவப்பு கோடுகளில் சமரசம் செய்யாது என்று வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதற்கிடையில் ஈரானுடனான போருக்கு நாங்கள் ஒரு சிறந்த தீர்வை எட்டியுள்ளோம் என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டவுடன் நீரிணை அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும். அது விரைவில் நடக்கலாம், ஒருவேளை இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் நடக்கலாம், என்றும் கூறிய ட்ரம்ப், அமெரிக்காவுக்காக துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் அதில் கையெழுத்திடக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமெனி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தாரா என்று கேட்கப்பட்டபோது, ட்ரம்ப், ஆம் என்று நான் புரிந்துகொள்கிறேன் என்றார்.
பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காரணம் காட்டி, ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை இரத்து செய்த பின்னர் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்தது.
இந்தச் செய்தியைத் தொடர்ந்து அமெரிக்கப் பங்குகள் உயர்ந்தன, எண்ணெய் விலைகள் சரிந்தன.
கடந்த மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கிவிட்டதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
இந்த வாரம் இரு தரப்பினரும் பரஸ்பரத் தாக்குதல்களை நடத்தி, ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கு விரிசலை ஏற்படுத்தியுள்ளனர்.
எந்தவொரு அமைதி ஒப்பந்தமும், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முடியாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். அத்தகைய ஆயுதத்தை தாங்கள் தேடுவதாக ஈரான் மறுக்கிறது.
சர்வதேசத் தடைகளை நீக்குதல், முடக்கப்பட்ட பில்லியன் கணக்கான டொலர் சொத்துக்களை விடுவித்தல் மற்றும் ஹார்முஸ் நீரிணையின் மீதான தனது கட்டுப்பாட்டை அங்கீகரித்தல் ஆகியவை ஈரானின் கோரிக்கைகளில் அடங்கும்.












