யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பேராசிரியர் கந்தையா பகீரதன் ,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீடமானது பிரதேசத்தை மையப்படுத்தி உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு ஒன்றினை 2015ஆம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் நடாத்துகிறது.
இம்முறை பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயத்திற்கான சர்வதேச ஆராய்ச்சி மாநாடு 2025 ஆம் ஆண்டு ஆனி மாதம் 24 ஆம் திகதி கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு அரங்கில் வர்த்தக விவசாயத்திற்கான புத்திசாலித்தனமான தீர்வுகள் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. “Smart Solutions for Commercial Agriculture” நடைபெறவுள்ளது.
இவ்வாராய்ச்சி மாநாட்டின் பிரதமவிருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இம்மாநாட்டின் நிறை அமர்வுப் பேச்சாளராக கனடா மனிட்டோபா பல்கலைக்கழகத்தின் மண் நுண்ணுயிரியல் பேராசிரியர் Ivan Oresnik, கலந்து சிறப்பிப்பதோடு. ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் வனவியல் பேராசிரியர் Toshiaki Owari திறவுகோல் உரையையும் ஆற்றவுள்ளனர்.
மேலும் இவ்வாராய்ச்சி மாநாட்டில் இலங்கை மற்றும் சர்வதேச ஆய்வாளர்களால் பயிராக்கவியல், விலங்கு விஞ்ஞானம் மற்றும் நீருயிரினவளர்ப்பு, பயிர் பாதுகாப்பு மற்றும் உயிர்தொழில்நுட்பவியல், மண், சூழல் மற்றும் நீர் விஞ்ஞானம், உணவு விஞ்ஞானம் மற்றும் போசனையும், பொருளாதாரம் மற்றும் அறிவூட்டல் ஆகிய உபதொனிப்பொருள்களில் 60க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் முன்னிலைப்படுத்தப்பட்டு, மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.
இம்மாநாட்டிற்கு பல்வேறு பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் விவசாயத்துறைசார் நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் எவ்வாறான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உலர்வலய விவசாயத்தில் புகுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய கலந்துரையாடல்களும் இம்மாநாட்டில் இடம்பெறவுள்ளது .என தெரிவித்தார்.














