தெற்கு லெபனான் மீது இன்று (19) நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளையில், அண்மைய மோதல் தீவிரமடைந்ததிலிருந்து நிகழ்ந்த மிக மோசமான இந்த தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
நள்ளிரவு முதல் நடைபெற்ற தீவிர வான்வழித் தாக்குதல்கள் மீட்பு மற்றும் வெளியேற்றும் பணிகளுக்குத் தடையாக உள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், முதற்கட்டமாக 18 பேர் உயிரிழந்ததாகவும், 33 பேர் காயமடைந்ததாகவும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் லெபனான் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
லெபனானின் நபாத்தியே (Nabatieh) மாவட்டத்தில் உள்ள பல நகரங்கள் மீது வியாழக்கிழமை இரவிலும் வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் வான்வழித் தாக்குதல்களும் ஷெல் தாக்குதல்களும் நடந்ததாக குடியிருப்பாளர்களும் லெபனான் ஊடகங்களும் தெரிவித்தன.
தெற்கு லெபனானின் பல பகுதிகளில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரையும் உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஈரான் ஆதரவு பெற்ற அந்த அமைப்பு மீண்டும் மீண்டும் போர் நிறுத்தத்தை மீறியதற்குப் பதிலடியாக இவை மேற்கொள்ளப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியது.
அதேநேரம், தெற்கு லெபனானில் உள்ள அலி அல்-தாஹெர் குன்றின் அருகே முன்னேறி வந்த இஸ்ரேலியப் படையைத் தங்கள் போராளிகள் பதுங்கியிருந்து தாக்கியதாகவும், ஏவுகணைகள் மூலம் மூன்று போர் டாங்கிகளை அழித்ததாகவும், ரொக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் மூலம் படைகளை குறிவைத்ததாகவும் ஹிஸ்புல்லா கூறியது.
இந்த நடவடிக்கைகள் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவர புதன்கிழமை அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த ஒப்பந்தம், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவரவும், லெபனானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை சம்பந்தப்பட்ட தரப்பினர் மதிக்கவும் அழைப்பு விடுக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

















