கதிர்காமம் யாத்திரைக்குப் போன யாத்திரிகர்களோடு இணைந்து செல்லும் சுப்பிரமணியம் என்ற நாயை வைத்துச் சமூக ஊடக வலைத்தளச் சூழலில் இடம்பெறும் வாதப்பிரதிவாதங்கள்;வாக்குவாதங்கள்;வன்மத்தைக் கக்கும் வெறுப்புக் கருத்துக்கள்..போன்றவற்றைத் தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?
தமிழ் மக்களை வழிநடத்த தமிழ் மக்கள் மத்தியில் இதுதான் சரி; இதுதான் பிழை என்று ஆணித்தரமாக எடுத்துக்கூறி கருத்துருவாக்கம் செய்யவல்ல; அரசியல் தலைவர்கள்,சமூகத் தலைவர்கள்,மதப் பெரியார்கள் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள்… போன்றவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சமூகத்தை வழிநடத்தவில்லை என்பதை அது காட்டுகிறதா?
இரண்டு சமூகங்கள்,இரண்டு மதங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் தமிழ் மக்களுக்கு சரியான திசையை காட்ட வேண்டிய பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள்,மதத் தலைவர்கள், பெரியார்கள்,சமூகப் பெரியார்கள், புத்திஜீவிகள்,கருத்துருவாக்கிகள், ஊடகங்கள் போன்றவர்கள் இந்த விடயத்தில் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்வதாகத் தெரிகிறதா?
இப்பொழுது நடந்து கொண்டிருப்பது வெறுமனே சமூக வலைத்தள ஊடகச் சூழலில் வழமையாக நடக்கும் ஒரு வாதப் பிரதிவாதம் மட்டும்தானா ?அல்லது 2009க்குப் பின்னரான கடந்த 17 ஆண்டுகளிலும் இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான கசப்பும் வெறுப்பும் கோபமும் பழிவாங்கும் உணர்ச்சியும் குறையவில்லை என்பதன் குறிகாட்டியா?
சில ஆண்டுகளுக்கு முன் ஐநா பொதுச் செயலர் தனது அறிக்கை ஒன்றில் மிகச்சரியாக ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்.”மனித குலம் சுய சிதைவை நோக்கிச் செல்கிறது” என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியிருந்தார்.சமூக ஊடக வலைதளச் சூழலை முன்வைத்தும் அவர் அவ்வாறு கூறினார்.
அதைத்தான் ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர்களும் ரோஹியங்கா இன அழிப்பு தொடர்பாகத் தெரிவித்தார்கள். பர்மாவில் ரோகியங்கா முஸ்லிம்கள் இன அழிப்பு செய்யப்பட்டமைக்கு முகநூலும் ஒரு கருவி என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் கண்டி,திகன பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களின்போது, அப்போது இருந்த அரசாங்கம் சமூக வலைத்தளங்கள் சிலவற்றை முடக்கியதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
சமூக ஊடக வலைத்தள சூழல் என்பது பெருமளவுக்கு சாதாரணமானவர்களின் கருத்துக்களைத்தான் பிரதிபலிக்கின்றது.சமானியர்கள் பெரும்பாலும் அறிவுபூர்வமாக விஞ்ஞானபூர்வமாக விடயங்களை விளங்கிக் கொள்வது குறைவு.உணர்ச்சிகரமான விடயங்களை அறிவுப்பூர்வமாக விளங்கிக் கொள்வதும் தீர்த்துக் கொள்வதும் குறைவு.அவர்கள் விடையங்களை பெரும்பாலும் குழு மனோ நிலையிலிருந்துதான் அணுகுவார்கள்.அந்தக் குழு மனோ நிலையானது இனம் சார்ந்ததாக,மொழி சார்ந்ததாக,மதம் சார்ந்ததாக, சாதி சார்ந்ததாக,பால் சார்ந்ததாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.இந்தக் குழு மனோநிலை அல்லது கும்பல் மனோநிலையானது ஓர் இனத்துக்கு அல்லது மதத்துக்கு அல்லது மொழிக்கு அல்லது பால் பிரிவினருக்கு ஆதரவானதாக மாறும்போது அது இன்னொரு பிரிவினருக்கு எதிரானதாகவும் அழிவானதாகவும் மாறுகிறது.
இந்தக் கும்பல் மனோநிலைக்கு வெளியே வந்து எது சரி என்பதைச் சுட்டிக்காட்டி,சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு அந்தச் சமூகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் சமூகப் பெரியாருக்கும் சமயப் பெரியாருக்கும் புத்திஜீவிகளுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு.ஆனால் சுப்பிரமணியத்தின் விடயத்தில் அது நடப்பதாகத் தெரியவில்லை.கடந்த 17 ஆண்டுகளாக ஈழத் தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடத்தை அது காட்டுகிறது. அதேசமயம் தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் நீறுபூத்துக் கிடக்கின்றன என்பதனையும் அது காட்டுகின்றதா?
எல்லா இனங்களிலும் சமூக ஊடக வலைத்தளங்கள் இப்படித்தான் இருக்குமோ தெரியாது.ஆனால் எனக்குத் தெரிந்தவரை தமிழில் நிலைமை படு கேவலம். அறிவானது,ஆழமானது,சமூகத்துக்கு நன்மை பயப்பது,யோசித்து எழுதப்படுவது, ஆழமாகத் தேடி எழுதப்படுவது … போன்றன வரவேற்கப்படுவது குறைவு. மேலோட்டமானது, அதனாலேயே விளங்குவதற்கு இலகுவானது, உணர்ச்சிகரமானது, குழு மனோநிலையை, கூட்டு உளவியலைப் பிரதிபலிப்பது, ஆபாசமானது, சூடானது, வெறுப்பைக் கக்குவது போன்றன அதிகம் வைரல் ஆகின்றன.
ஈழத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழகத்திலும் இதுதான் நிலைமையா? அண்மை மாதங்களாக திரைப் பிரபல்யங்கள் சில இறந்தபோது சமூக வலைத்தள ஊடகங்களின் கவனக்குவிப்பு முழுவதும் அந்தச் செத்த வீடுகளின் மீதுதான் இருந்தது. பிரமுகரின் உடலைப் பார்க்கப் போன பிரமுகரைச் சுற்றிச் சுற்றியே கமராக்கள் சுழன்றன.பிரமுகரின் சா வீட்டுக்குப் போகும் பிரமுகர்களுக்காக வழியை விலக்கிக் கொடுக்கும் காவல்துறை,அல்லது தொண்டர்கள்,பிரமுகருக்கு துணைக்கு வரும் மெய்க்காவலர்கள்,அல்லது அவர்களைப் போன்றவர்கள்,முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு வரும் பிரமுகர்கள்,இவர்களைத்தான் கமராக்கள் நமக்கு காட்டுகின்றன. ஓர் அரசியல் செயற்பாட்டாளர்கள் கேட்டதுபோல இவற்றைப் பார்ப்பதுதான் நமது வேலையா? இவைதான் நாம் பார்க்க வேண்டிய முக்கிய விடயங்களா? தமிழில் பாரம்பரிய ஊடகங்களும் சரி சமூகஊடக வலைத்தளச் சூழலும் சரி “செலிபரேட்டிகளை” மையமாகக் கொண்டதுதானா?
ஜனரஞ்சகமானது, ஆழமற்றது, மந்தமானதுதான் எப்பொழுதும் வைரல் ஆகுமா? கதிர்காமத்துக்கு போகும் பாதயாத்திரிகர்கள் மத்தியில் காணப்படும் சுப்பிரமணியம் என்ற நாயின் விவகாரத்திலும் அதுதான் நடக்கின்றதா ? சுப்பிரமணியம் பாத யாத்திரியர்களோடு இணைந்தது தற்செயலானது. அதை ஒரு முஸ்லிம் கல்முனையில் வைத்து தாக்கியதால் அது பிரபல்யமாகியது. அங்கிருந்து தொடங்கி சுப்பிரமணியம் பேசுபொருள் ஆகிவிட்டது.
அதை முதலில் உதைந்தவர் அதற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.கல்முனைச் சம்பவத்தின் விளைவாக சவூதியில் வசிக்கும் ஒரு தமிழர், நபிகள் நாயகத்துக்கு எதிராக ஒரு கருத்தைப் பதிவிட்டார்.அவரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார்.எனினும், இப்பொழுது சவூதி அரேபிய நாட்டின் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டிருக்கிறார். இங்கிருந்து தொடங்கி சுப்பிரமணியத்தைச் சுற்றிச் சமூக ஊடக வலைத்தள விவாதப் பரப்பு ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது. இதில் நிதானமாகவும் நீண்ட கால நோக்கிலும் கருத்துக் கூறுவோர் மிகச்சிறிய தொகைதான். பெருந்தொகையானவர்கள் குழு மனோநிலைக்கு உட்பட்டு ஒருவர் மற்றவரைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பாத யாத்திரிகர்களில் ஒரு பகுதியினர் சுப்பிரமணியம் தங்களோடு இணைந்தமை தெய்வச் செயல் என்று கருதுகிறார்கள்.கிளிநொச்சியைச் சேர்ந்த ஓர் அரசியல் செயற்பாட்டாளர் “சுப்ரமணியம் விளைவு” என்று எழுதுகிறார். கிழக்கில் சுப்பிரமணியம் நடந்து போகும் வழிநெடுக தமிழர்கள் அதனை அரவணைக்கிறார்கள்; அதற்கு உணவு கொடுக்கிறார்கள்; அதை அன்போடு தடவுகிறார்கள்;அதோடு நின்று செல்பி எடுக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து வந்து பாதயாத்திரை செய்த பௌத்த பிக்குகளோடு இணைந்து வந்த “லோகா” என்ற நாய்க்கு நிகராக ஒரு பகுதி இந்துக்கள் சுப்பிரமணியத்தை உயர்த்துகிறார்கள்.
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான அன்பின் குறியீடாக சுப்பிரமணியத்தை உயர்த்துவது வேறு. சுப்பிரமணியம் தங்களுடைய பாத யாத்திரிகர் அணிக்குள் இணைந்து கொண்டமை தெய்வச் செயல் என்று கருதுவதும் வேறு.ஆனால் தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்க முற்படும் வெறுப்பர்கள் சுப்பிரமணியத்தைத் தத்தெடுப்பது வேறு.
இந்த விடயத்தில் சுப்பிரமணியத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக ஊடக வலைத்தளச் சூழலில் கக்கப்படும் வெறுப்பைக் கட்டுப்படுத்துவது யார் ? இரண்டு தரப்பிலும் உள்ள மதத்தலைவர்கள்,சமயப் பெரியார்கள்,புத்திஜீவிகள் அரசியல் பிரமுகர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள் போன்றவர்களுக்கு இதில் பொறுப்பு இல்லையா? வழமையான முகநூல் விவாதங்களை;முகநூல் வெறுப்புப் பிரசங்கங்களை சிரித்துவிட்டுக் கடந்து போவதுபோல அல்லது கண்டும்காணாமல் விடுவதுபோல இதுவும் விடப்படுகிறதா?
ஆனால் இது ஆபத்தான ஒரு பார்வையாளர் மனோநிலை.தமது முகநூல் நட்பு வட்டத்துக்குள் இருக்கும் ஒருவர் இன்னொருவரைப் பற்றி; அல்லது இன்னொரு மதத்தைப் பற்றி;இன்னொரு சமூகத்தைப் பற்றி;அல்லது பால் பிரிவினரைப் பற்றி அவதூறாக,அவமதிப்பாக,வெறுப்பாக எழுதும்போது அதை அப்படியே கண்டும் காணாமல் விடமுடியுமா? அதைக் கண்டு சிரித்துவிட்டு அல்லது முகத்தைச் சுளித்துவிட்டு கடந்து போய்விட முடியுமா? அந்த இடத்தில் ஒரு நண்பராக அந்த முகநூல் நண்பருக்கு ஆலோசனை கூறவேண்டிய,அறிவுறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இல்லையா?
இதையே நமது பிள்ளைகள் அல்லது சகோதரங்கள் அல்லது நமக்கு வேண்டிய நண்பர்கள் செய்யும்போது அதை நாம் தட்டிக்கேட்க மாட்டோமா? அல்லது இதுவே நமக்கு நடந்தால் மற்றவர்கள் அதைத் தட்டிக்கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டோமா ?
ஆனால் முகநூலில், சமூக ஊடக வலைத்தளங்களில் ஒருவர் மற்றவரை தாக்கும் பொழுது எங்களின் பலர் அதைக் கண்டும் காணாமல் விடுகிறோம். அதை ஒரு வழமை என்று ஏற்றுக்கொண்டு கடந்து போய்விடப் பார்க்கிறோம். இது ஒரு சமூகப் பொறுப்பின்மை.இது ஒரு நோய்.இந்தப் பொறுப்பின்மைதான் வெறுப்பர்களை ஊக்குவிக்கின்றது.நல்லவர்களின் நீதிமான்களின் மௌனத்தை, வெறுப்பவர்கள் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்துகிறார்கள். சுப்பிரமணியத்தின் விடயத்திலும் அதுதான் நடக்கின்றது.
கதிர்காமத்துக்கான பாதயாத்திரை எனப்படுவது இலங்கைத் தீவின் மிக நீண்ட ஒரு பாதயாத்திரை.நூறாண்டு காலப் பாரம்பரியத்தைக் கொண்டது. சித்தர்கள் நடந்த வழியில் இப்பொழுது சுப்பிரமணியமும் நடக்கின்றது. சமாதானத்துக்காக நடந்துவந்த பௌத்த பிக்குகளோடு சேர்ந்து நடந்த லோகாவை போல,சுப்ரமணியத்தை பிரபல்யப்படுத்த வேண்டும் என்று விரும்பும் தரப்புகள், சுப்பிரமணியத்தை அன்பின் குறியீடாகவே மேலுயர்ந்த வேண்டும்.
இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான வெறுப்பைப் புதுப்பிக்கும் ஒரு குறியீடாக அது உயர்த்தப்படுவதைத் தடுக்கவேண்டிய பொறுப்பு இந்துக்களுக்கும் உண்டு;முஸ்லிம்களுக்கும் உண்டு.
இந்தவிடயத்தில் இதுவரையிலும் மௌனமாக இருந்த மதப் பெரியார்களும் பிரசங்கிகளும் மக்கள் பிரதிநிதிகளும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் கருத்துருவாக்கிகளும் கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் துணிந்து முன்வந்து கருத்துக்கூற வேண்டும்.வெறுப்பர்கள் சுப்பிரமணியத்தை தத்தெடுப்பதைத் தடுக்க வேண்டும்.வாயில்லா ஜீவனை வைத்து,வாயுள்ள ஜீவன்கள், தந்திரமான ஜீவன்கள்,ஏனைய மதங்களை வெறுக்கும் ஜீவன்கள்,அரசியல் செய்ய விடக்கூடாது.














