பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கக்கூடிய மற்றொரு தனித்துவமான புறக்கோளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியின் “அருகிலுள்ள அண்டைக்கோள்” என்று அழைக்கப்படும் இந்தக் கோளுக்கு GJ 3378b எனப் பெயரிடப்பட்டுள்ளது.
வேற்றுக்கிரக உயிர்களைத் தேடும் முயற்சியில் கண்டறியப்பட்ட மிகவும் நம்பிக்கைக்குரிய கோள்களில் ஒன்றாக இது தற்போது விஞ்ஞானிகளின் ஆழ்ந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.
பூமியை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான அளவுள்ள இந்தக் கோள், சூப்பர்-எர்த் வகையைச் சேர்ந்தது.
இது, சிவப்பு குள்ளன் (Red Dwarf) எனப்படும் ஒப்பீட்டளவில் அருகிலுள்ள ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.
இந்தக் கண்டுபிடிப்பின் சிறப்பு என்னவென்றால், இந்தக் கோள் அந்த நட்சத்திரத்தின் “வாழத் தகுந்த மண்டலத்தில்” அல்லது “பொன் மண்டலத்தில்” அமைந்துள்ளது.
இந்த மண்டலம், ஒரு கோளின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கு உகந்த வெப்பநிலையாகும்.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள மெக்டொனால்ட் ஆய்வகத்தில் இருக்கும் 10-மீட்டர் ஹாபி-எபர்லி தொலைநோக்கியில் உள்ள வாழத் தகுந்த மண்டல கோள் கண்டுபிடிப்பான் (Habitable-zone Planet Finder) கருவி மற்றும் அரிசோனாவில் உள்ள WIYN தொலைநோக்கியில் உள்ள NEID நிறமாலைமானி ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்பு செய்யப்பட்டது.
சூரியனிடமிருந்து பூமி பெறும் கதிர்வீச்சில் 90%-ஐ இந்த சூப்பர்-எர்த் அதன் தாய் நட்சத்திரத்திலிருந்து பெறுகிறது என்றும், இது உயிர்கள் வாழ்வதற்கு மிகவும் உகந்த சமநிலை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தக் கோள் வாழக்கூடிய மண்டலத்தில் அமைந்திருந்தாலும், “இதற்கு வளிமண்டலம் உள்ளதா?” என்பதே இன்னும் தீர்க்கப்படாத முக்கியக் கேள்வியாக உள்ளது.
ஒரு கோள் நிலையான மேற்பரப்பு நிலைகளைப் பராமரிக்கவும், விண்வெளியிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சிலிருந்து அதைப் பாதுகாக்கவும் வளிமண்டலம் அவசியமாகும்.
GJ 3378b என்ற கோள், விஞ்ஞானிகள் “விண்வெளிக் கரை” (Cosmic Shoreline) என்று அழைக்கும் பகுதியில் அமைந்துள்ளது.
அதாவது, ஒரு கோளின் தாய் நட்சத்திரத்திலிருந்து வரும் கடுமையான கதிர்வீச்சை எதிர்கொண்டாலும், அதன் ஈர்ப்பு விசையால் வளிமண்டலத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான எல்லைக்கோடு அது.
விஞ்ஞானி பால் ராபர்ட்சன், ஒரு ஆப்பிளை உவமையாகக் கொண்டு பூமியின் வளிமண்டலத்தின் தன்மையை விளக்கியுள்ளார்.
பூமியை ஒரு ஆப்பிளின் அளவிற்குச் சுருக்கினால், அதன் வளிமண்டலம் ஒரு ஆப்பிளின் தோலைப் போல மெல்லியதாக இருக்கும்.
அந்த அளவு, திரவ நீரையும் சுவாசிக்கக்கூடிய காற்றையும் தாங்குவதற்கும், விண்வெளிக் கதிர்வீச்சிலிருந்து அதைப் பாதுகாப்பதற்கும் போதுமானது.
ஆனால், செவ்வாய் கிரகத்திற்கு ஒரு காலத்தில் வளிமண்டலம் இருந்து, பின்னர் அது சூரியக் கதிர்வீச்சால் அதனை இழந்ததை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்தக் கிரகத்தில் வளிமண்டலம் இருப்பதை உறுதிப்படுத்த, இன்னும் சக்திவாய்ந்த விண்வெளி மற்றும் தரை அடிப்படையிலான ஆய்வகங்கள் தேவைப்படும்.
கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவரான கோகோட் ஜேம்ஸ், இந்தக் கிரகத்திற்கு முறையான வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதில் உயிரியல் அறிகுறிகளும் திரவ நீரும் உள்ளனவா என்பது குறித்த மேலதிக ஆய்வுகளுக்கு அது வழிவகுக்கும் என்று கூறுகிறார்.














