கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய மலேசிய நாட்டுப் பிரஜை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இந்த போதைப்பொருள் தொகையைப் பெற்றுக்கொண்டு துபாய்க்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் இன்று (18) காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தின் சுங்க சோதனைகளைத் தவிர்ப்பதற்காக, தனது பயணப்பொதியில் போதைப்பொருளை மறைத்து வைத்துக்கொண்டு, “பசுமை வழி” ஊடாக வௌியேற முயன்ற போதே சுங்க அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் அவர் சிக்கியுள்ளார்.
சுங்க அதிகாரிகள் சந்தேகநபரின் பயணப்பொதியைச் சோதனை செய்த போது, அதனுள் இருந்த 03 சொக்லேட் டொப்பி போத்தல்களுக்குள் 92 மாத்திரைகளாக மிகவும் நுணுக்கமான முறையில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 816 கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மலேசிய பயணி மற்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகையான கொக்கேய்ன் போதைப்பொருள் என்பன மேலதிக விசாரணைகளுக்காகக் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இக்கடத்தலின் பின்னணியில் உள்ள சர்வதேச நெட்வொர்க் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.















