அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணங்களின்படி, இளவரசர் ஆண்ட்ரூ 2010 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் வர்த்தக தூதராக பணியாற்றியபோது, தனது அரசுப்பணி தொடர்பான ரகசிய தகவல்களை எப்ஸ்டீனுடன் தெரிந்தே பகிர்ந்து கொண்டதாக பிபிசி (BBC) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்ட மின்னஞ்சல்களின்படி, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கான தனது பயண அறிக்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ரகசிய விவரங்களை ஆண்ட்ரூ, எப்ஸ்டீனுக்கு அனுப்பியுள்ளார்.
அரசு விதிமுறைகளின்படி, வர்த்தக தூதர்கள் தங்கள் பயணங்களின் போது பெறும் வணிக ரீதியான அல்லது அரசியல் ரீதியான ரகசிய தகவல்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை கொண்டவர்கள்.
கடந்த 2001 முதல் 2011 வரை வர்த்தக தூதராகப் பணியாற்றிய ஆண்ட்ரூ, இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
இருப்பினும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்நிலையில் அக்டோபர் 7, 2010: சிங்கப்பூர், வியட்நாம், சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களுக்குத் தான் மேற்கொள்ளவிருந்த பயணங்கள் குறித்த விவரங்களை எப்ஸ்டீனுக்கு ஆண்ட்ரூ அனுப்பியுள்ளமைக்கான மின்னஞ்சல் ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
2010 ஆம் ஆண்டு நவம்பர் 30, அந்தப் பயணங்கள் முடிந்து தனது உதவியாளர் அனுப்பிய அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பெற்ற ஐந்தே நிமிடங்களில், அதை அப்படியே எப்ஸ்டீனுக்கு ஆண்ட்ரூ பகிர்ந்துள்ளார்.
2010ஆம் ஆண்டு டிசம்பர் 24, ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாண மறுசீரமைப்புப் பணிகளில் இருந்த முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ரகசியத் தகவல்களை அனுப்பியுள்ளார்.
இந்தப் பணிகள் அப்போது பிரிட்டிஷ் ஆயுதப் படைகளின் மேற்பார்வையில், அரசு நிதியுதவியுடன் நடந்து கொண்டிருந்தன.
குறிப்பாக இந்தத் தகவல்கள் பகிரப்பட்ட காலக்கட்டத்தில், எப்ஸ்டீன் ஏற்கனவே பாலியல் குற்றவாளி எனத் தண்டனை பெற்றவராக இருந்தார்.
வர்த்தக தூதர்களுக்கான விதிமுறைகளின்படி, அவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்றாலும், தங்களுக்குத் தெரியவரும் ரகசியத் தகவல்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு.
அவர்களது பதவிக்காலம் முடிந்த பிறகும் இந்த ரகசிய காப்பு விதிமுறை பொருந்தும்.
இதேவேளை, எப்ஸ்டீனுடனான நட்பு காரணமாகப் பல ஆண்டுகளாக விமர்சனங்களைச் சந்தித்து வந்த ஆண்ட்ரூவின் ‘இளவரசர்’ உள்ளிட்ட அரசப் பட்டங்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















