ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 41 பேரில் 12 பேருக்கு மரண தண்டனை விதித்து, கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அமரகீர்த்தி அத்துகோரல, தாக்கி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என கடந்த மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூவரடங்கிய நீதிபதிகள் தீர்பாயத்தின் முன்பாக வழங்கு விசாரணை இன்று காலை இடம்பெற்றது.
இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்;தியில் முன்நிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
நீண்ட விசாரணைக்குப் பின்னர், 16 பிரதிவாதிகள் குற்றவாளிகள் எனக் கண்டறிந்த நீதிமன்றம், அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும் 4 பேருக்கு 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைதண்டனையையும் விதித்தது.
இதேவேளை, படுகொலை சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 23 பேர் இந்த வழக்கிலிருந்து, நிரபராதிகளாக கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த வழக்குடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக வழக்கு விசாரணையின் போது 13 மற்றும் 31 ஆம் பிரதிவாதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தமாக 41 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டத்தின்போது, நிட்டம்புவ நகரில் வைத்து பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல துப்பாக்கியுடன் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வது அருகிலுள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது. இதன் பின்னரே இது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைகளின் ஒரு கட்டமாக, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 37 சந்தேகநபர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க, கம்பஹா மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் எடுத்த முடிவை இரத்து செய்யுமாறு கோரி சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


















