ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சனிக்கிழமை (07) மத்திய லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த அணிவகுப்பில் 5,000 முதல் 6,000 பேர் வரை கலந்து கொண்டதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களை ஒழிக்கும் இயக்கம், பாலஸ்தீன ஒற்றுமை இயக்கம், பிரிட்டனின் முஸ்லிம் சங்கம், பிரிட்டனில் உள்ள பாலஸ்தீன மன்றம் மற்றும் அல்-அக்ஸா நண்பர்கள் இயக்கம் உள்ளிட்டோர் சனிக்கிழமை பிற்பகல் வெஸ்ட்மின்ஸ்டர் அருகே உள்ள மில்பாங்கில் கூடிய பின்னர் தூதரகத்தை நோக்கி இந்தப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.
பல போராட்டக்காரர்கள் ஈரானிய மற்றும் பாலஸ்தீனிய கொடிகளையும், கடந்த சனிக்கிழமை போரின் போதான தொடக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் உருவப்படங்களையும் கைகளில் ஏந்தியிருந்ததாக கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாக்க அதிகாரிகளை அனுப்பிய மெட்ரோ காவல் துறை, ஆர்ப்பாட்டக்காரர்கள் நியமிக்கப்பட்ட பாதைகளில் கூடி, மாலை 5 மணிக்குள் தங்கள் அணிவகுப்பு பேரணிகளை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்னதாக விதித்திருந்தது.
மில்பாங்கைச் சுற்றி பல பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டன, பல அதிகாரிகள் சாலையில் ரோந்து பணிகளை முன்னெடுத்தும் இருந்தனர்.












