இலங்கை மின்சார சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பிற்கமைய, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நான்கு பிரதான நிறுவனங்களும், முழுமையாக அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்றைய ஊடக சந்திப்பினர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர் ,
கடந்த காலங்களில் முன்மொழியப்பட்ட 12 நிறுவனங்களுக்குப் பதிலாக,
தற்போது 6 நிறுவனங்கள் மாத்திரமே நாம் நிறுவியுள்ளோம்.
இதன் மூலம் 12,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பினை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.
முற்றுமுழுதாக அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனங்களிடமே பொறுப்புக்களையும் பகிர்ந்தளித்துள்ளோம்.
இரண்டு நிறுவனங்கள் இந்த மறுசீரமைப்புக்களின் இடைநிலை பணிகள் சார்ந்தவையாக உள்ளன.
எஞ்சிய நான்கு நிறுவனங்கள் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தற்போதும் மின் உற்பத்தி, விநியோகம், மின் கடத்தல் மற்றும் கட்டமைப்பு முகாமைத்துவம் உள்ளிட்ட செயற்பாடுகள்,நான்கு பிரிவுகளின் கீழ் இலங்கை மின்சாரசபையால் முன்னெடுக்கப்பட்டது.
அவையே தற்போது 4 நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மின்சாரசபைக்கான 500 பில்லியன் ரூபா செலவில்,
400 பில்லியன் ரூபா மாத்திரம் மின் உற்பத்திகான செலவிடப்பட்டுள்ளது.
மேலும் முன்னர் காணப்பட்ட பிரிவுகளை நிறுவனங்களாக மாற்றுவதன் மூலம்
அவற்றின் செயற்றிறனை அதிகரிப்பதற்கும், தனியாருக்கு முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கி
குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கும்
இந்த மறுசீரமைப்பின் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனங்களுக்கான, நிர்வாக அதிகாரிகளும்,
பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி மறுசீரமைப்பிற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எவ்வாறிருப்பினும் நாம் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு,
நீதிமன்றத்தின் அனுமதியையும் பெற்றுள்ளோம்.
ஆனால் மீண்டும் 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் திருத்தப்பட்ட சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஒக்டோபரில் இது தொடர்பான தெளிவு படுத்தல்கள் ஊழியர்களுக்கு அறிவித்தலூடாக வழங்கப்பட்டது.
நிறுவனங்களில் இணைய விரும்பாதவர்களுக்கு சுய விருப்பில் ஓய்வு பெற வாய்ப்பளிக்கப்பட்டது.
அதற்கமைய ஓய்வு பெற விண்ணப்பித்த 2153 ஊழியர்களில், 2113 ஊழியர்களுக்கு நஷ்டஈட்டுடன் ஓய்வு வழங்கப்படவுள்ளது.
ஏனைய ஊழியர்களுக்கான கொடுப்பனவு, மேலதிகக் கொடுப்பனவு உள்ளிட்டவற்றில்
எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது.













