ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று (11) நிறைவு செய்தது.
இதனையடுத்து, இந்த மேன்முறையீடுகளின் மீதான தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை உயர் நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.
இன்று மூன்றாவது நாளாக நடைபெற்ற இந்த விசாரணையின்போது, பிரதிவாதிகளான மேன்முறையீட்டாளர்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தரணிகளின் வாதங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவடைந்தன.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதியரசர்கள் குழாம், வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை பின்னர் ஒரு திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.












