உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் இயங்கிவரும் ஆரம்பப் பாடசாலையொன்றினுள் கத்தியுடன் நுழைந்த நபர், அங்கிருந்த சிறுவர்களை கத்தியால் தாக்கியதில் 4 சிறுவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை (2) இந்த கொடூர கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, 34 வயதுடைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஒரு சிறுமியும் மூன்று சிறுவர்களும் கொல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் சிறுவர் ஒருவரின் பெற்றோர் போன்று தன்னை வெளிப்படுத்தி, பாடசாலை அலுவலகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பொறுப்பு நிர்வாகியுடன் சிறிது நேரம் உரையாடியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளதாக உள்ளூர் பத்திரிகையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்வாகியுடன் உரையாடிவிட்டு, வெளியே சென்ற அந்த நபர், வாயிலை பூட்டிவிட்டு, சிறுவர்களை தாக்கத் தொடங்கியதாகவும், அவ்வேளை அருகில் உள்ள தேவாலயத்தின் பாதுகாப்பு ஊழியர், தாக்குதலில் ஈடுபட்டிருந்த சந்தேக நபரை தடுத்து நிறுத்தியதாகவும் அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலைகளுக்கான நோக்கம் குறித்து அறிவதற்கு சந்தேக நபரிடம் பொலிஸார் தொடர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.














