வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட வாழைச்சேனை, நுவரெலியா, உயாங்கொட பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேரை இன்று (10) அதிகாலையில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் பூஜைப் பொருட்கள் மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்களை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினர் குகணேசபுரம் கருங்காலிச்சோலையில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளரின் காணி ஒன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 பேரை கைது செய்ததுடன் பூஜைப் பொருட்கள் மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்களை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் கருங்காலிச்சோலை, ஓட்டுமாவடி, நவகந்தேகம, மற்றும் உயாங்கொட, நுவரெலியா, பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.













