வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கை தமிழ் மக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிலப்பரப்பு பௌத்த சமயத்திற்குரியது என்றும், அதனை எல்லையிட்டு விரைவில் வர்த்தமானி (Gazette) அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் துறைசார் அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
“வெடுக்குநாறி மலையில் பௌத்த சான்றுகள் இருப்பதாகக் கூறி நிலங்களை அடையாளப்படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இது வரலாற்றை மறைக்கும் செயல் மாத்திரமன்றி, இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கும் ஒரு முயற்சியாகும்” என அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கடந்த காலங்களில் தாம் ஆட்சியில் இருந்தபோது, இவ்வாறான வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படாமல் தடுத்து, ஒரு சுமுகமான நிலையைப் பேணி வந்ததாகக் குறிப்பிட்ட அவர், இன்றைய சூழலில் நிலைமை முற்றிலும் மாற்றமடைந்து வருவது துரதிர்ஷ்டவசமானது எனவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை விளக்கி, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.











