இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு (Category A) சிறையின் நிலைமை இன்னும் “மிகவும் ஆபத்தான நிலையில்” உள்ளது என HM சிறைச்சாலைகள் ஆய்வகம் (HM Inspectorate of Prisons) வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு இந்த சிறை சிறப்பு கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் 2026 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்விலும், நிலைமை பெரிதாக மேம்படவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிறையில் கடுமையான தாக்குதல் சம்பவங்கள் அதிகமாக உள்ளதுடன், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக போதைப்பொருள் பிரச்சினையும் அதிகரித்துவருகிறது.
இது குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்ததாவது, ட்ரோன்கள் மூலம் பெருமளவில் போதைப்பொருட்கள் சிறைக்குள் கொண்டு வரப்படுகின்றன. இது சிறையில் வன்முறை மற்றும் நிலையற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. மேலும், சிறை நிர்வாகத்தின் திட்டமிடல் முறை மிகவும் சிக்கலானதும் செயலற்றதுமானதாக இருப்பதால், பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் தாமதமாகின்றன.
குறிப்பாக, ஜன்னல்கள் மற்றும் பாதுகாப்பு கிரில்லுகள் மாற்றப்படாமல் இருப்பது பெரிய குறையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்கள் தடை இல்லாமல் செயல்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர்
மேலும், ட்ரோன்களை கண்டறிய கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், மற்றும் சிறை அறைகள் சோதனை செய்யப்பட்டாலும், போதைப்பொருள் பயன்பாட்டில் எந்தக் குறையும் இல்லை. தற்போது 38% கைதிகள் போதைப்பொருள் சோதனையில் நேர்மறை முடிவுகளை காட்டியுள்ளனர்.
இது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சிறைகளில் மிக உயர்ந்த அளவுகளில் ஒன்றாகும்.
ஆய்வில் பங்கேற்ற கைதிகளில் பாதிபேர், “சிறையில் சட்டவிரோத பொருட்களை எளிதாக பெற முடிகிறது” என்று தெரிவித்துள்ளனர்.














