தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக எதிர்கால சந்ததிக்கு அன்னையின் தியாகத்தையும், தமிழின போராட்டத்தின் வரலாற்றையும் கடத்தும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திப் பவணி 10ம் நாளான இன்று மட்டக்களப்பின் படுவான்கரை பிரதேசங்கள் பலவற்றிற்குக் கொண்டு செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
10ம் நாளான இன்று காலை களுவாஞ்சிக்குடி நகரில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வூர்திப் பவணியானது வெல்லாவெளி, மண்டூர், கொக்கட்டிச்சோலை, வவுணதீவு பிரதேசங்களுக்குச் சென்று அங்கு மக்களின் அஞ்சலிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றதுடன், மக்களும் உணர்வுபூர்வமாக அன்னைக்கு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 09ம் திகதி யாழ் நல்லூர் தியாகி திலீபன் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வூர்திப் பவணி வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள பிரதேசங்கள் அனைத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு நாளை அன்னை பூபதியின் நினைவிடத்தில் முடிவுறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய பவணியின் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் ஊர்தியுடன் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.












