ராஜஸ்தானில், பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ராஜஸ்தானில் பலோத்ரா மாவட்டத்தின் பச்சபத்ரா என்ற இடத்தில், நாட்டின் முதல் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் பசுமை வளாகம் அமைந்துள்ளது.
இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்த சுத்திகரிப்பு நிலையம் முக்கிய பங்கு வகிக்கும்.
2013 செப்டம்பரில், முந்தைய காங்கிரஸ் அரசால் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆட்சி மாற்றத்துக்கு பின், 2018 ஜனவரியில் இத்திட்டத்தை பிரதமர் மோடி மீண்டும் ஆரம்பித்து வைத்தார்.
திட்ட மதிப்பு, 43,129 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவிருந்த நிலையில், அங்கு நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சுத்திகரிப்பு நிலையத்தின் கச்சா எண்ணய் காய்ச்சி வடித்தல் பிரிவில், தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.
இது குறித்து வழக்குப் பதிந்து பொலிஸார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, பிரதமர் மோடி துவக்கி வைக்கவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.















