தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று (18) கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தமிழின அழிப்பின் போது மிஞ்சிய தமிழர்களின் உயிர்களை காப்பதற்காக உப்பில்லாத அரிசிகளை உபயோகித்து நீரை ஊற்றி அங்குள்ள கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக தயாரிக்கப்பட்டவையே முள்ளிவாய்க்கால் கஞ்சியாகும்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உறும்பிராயில் அமைந்துள்ள முதல் விடுதலை போராளி பொன்.சிவகுமாரின் சிலை அருகில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பொன். சிவகுமாரின் சிலைக்கு மாலை அணிவித்து முள்ளிவாய்க்கால் நினைவாக பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் பொதுமக்களில் 100 பேருக்கு அரிசிப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னால நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரிமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












