முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்(18)
அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (18) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
குறிப்பாக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம் ஜெகதீசன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.













